Saturday, July 23, 2011

புனைகவி

புனைகுழல் புனைந்துரைக்கும் புனையினால்,
புனைதனை புனைவிட்டாய் எனக்கு.
சுனையால் புனைவிய கொடிமலரில்,
புனையல் புணர்வேன் உனக்கு.
..........கந்தசுவாமி......

வியக்கிறேன்

வேற்றுக் கிரகத்தில் மனிதர்களா?
நூற்றுக் கணக்கில் ஆராய்ச்சிகள்.
சோற்றுக்கே வழியில்லை பலருக்கும்.
சோதனைக்கு கோடிகள் செலவு.
மனிதனின் அறிவினை வியக்கிறேன்!!!
..........கந்தசுவாமி.........

Tuesday, July 12, 2011

தேவதை


இயந்திரச் சத்தம்,
இனிய இசையாகிறது....
வாகனப் புகை,
வாசனைத் தென்றலாகிறது...
சாலையில் அவளைச் செல்ல வைத்தே,
ஓசோன் ஓட்டையினை அடைத்திடலாமோ!!
.............கந்தசுவாமி...........

Tuesday, July 5, 2011

எண்களில் காதல்


ஒரு நாள் அவளைக் கண்டேன்.
இரு இதயம் கலக்கக் கண்டேன்.
மூன்று காலம் மறந்து நின்றேன்,
நான்கு திசைகள் தொலைத்து நின்றேன்.
ஐம்புலன்கள் திறந்து கொண்டன.
ஆறரிவும் பறந்து சென்றன.
ஏழேழு ஜென்மங்கள் இணைந்திருந்து,
எட்டைப் போல் பிணைந்திருந்து,
ஒன்பது கிரகங்கள் தாவி விளையாடினாலும்,
பத்தாது கண்ணே என் காதலைச் சொல்லிட!!!!!!!!!!!!!
.............கந்தசுவாமி..................

Monday, July 4, 2011

ம(பு)னிதம்


உதிரும் உயிர்கள் பலவும்,
உதிரம் இருந்தால் நிலவும்.
குருதியின் மகத்துவம்,
கருதியே அளிப்போம்.
மனிதம் மதித்துப் போற்றினால்,
மரணமும் விலகிப்போய் கைத்தட்டும்.
.........கந்தசுவாமி..............

Sunday, July 3, 2011

நட்புக்காலம்

'நட்புக்காலம்' என்னும் தலைப்பில் நான் இங்கு படைத்திருப்பது,
நினைவுகளின் தொகுப்பு.
நாம் வாழ்ந்த,வாழ்கின்ற அற்புத நாட்களை வார்த்தைகளில் வடித்திருக்கிறேன்.
ஒரு வரியேனும் உங்கள் நண்பர்களை நினைவூட்டும் என்ற நம்பிக்கையுடன்.

நட்புக்காலம்

'அ' வைக் கரம் எழுதிய நிமிடம்,
அவை அகரம் ஆனது நட்பிற்கு.
கூட்டல் கழித்தல் நாமறிந்த போது,
கூடினோம் ஒன்றாய்க் கழித்தல் ஏது!
வகுத்தல் பெருக்கல் அறிந்து கொண்டோம்.
வகுக்கும் குணமில்லை பெருகிவிட்டோம்.
இயற்பியல் வேதியல் நினைவில் வைத்தோம்.
இயல்பாய் நேசம் இதயம் வைத்தோம்.
பள்ளி முடித்துத் துள்ளி ஆட்டம்.
உள்ளம் கொள்ளப் புதிய கூட்டம்.
உடலில் செயலில் சிறிய மாற்றம்,
விடலைக் கூட்டம் எங்கள் தோற்றம்.
சாயும் காலம் தேனீர் அருந்தி,
சாலைக் கடையில் சாப்பிடப் பொருந்தி,
இரவில் தெருவில் உலா வருவோம்,
இரவல் வண்டியில் இன்பம் பெருவோம்.
அளவில்லா அரட்டை அடித்துச் சிரித்தோம்,
இளமைச் சிரமங்கள் நட்பினில் எரித்தோம்.
முதல் நாள் எந்திரன் படம்.
முட்டி மோதிப் பிடித்தோம் இடம்.
சாமம் விழித்துப் படங்கள் பார்த்தோம்,
காலை வகுப்பைத் தூங்கித் தீர்த்தோம்.
சேர்ந்து படித்தோம் தேர்வு சமயம்.
சேர்ந்தே இருந்தால் சிறிதே இமயம்.
வானவில் ரசித்தோம் மழையில் நனைந்து.
வாழ்க்கை ரசித்தோம் நட்பினில் நனைந்து.
முக்காலமும் இனிமை நட்புக்காலம்.
அஃதின்றி வாழ்க்கை உப்புக்காலம்.
இணைந்திருப்போம் நண்பா.
என்றெறென்றும் அன்பாய்...
..........கந்தசுவாமி........

Saturday, July 2, 2011

விள‌ம்பரம்


மழை கூட விள‌ம்பரம் செய்கின்றது
மின்னல் விளக்காலும்,
இடியின் இசையாலும்.
........கந்தசுவாமி..........