Friday, April 20, 2012

ரசிகன்


20.4.1991………….

ஐந்து தையல்.

கீழ் இமைக்குக் கீழே ஒரு புருவம் முளைத்திருந்தது.

"தேவையாடா உனக்கு இது?"

"என் தலைவர் படத்த பத்தி தப்பா பேசுனா சும்மா விடுவனா.ரெண்டு போட்டன்."

"உனக்கும் நல்லா போட்டுத்தான் அனுப்பியிருக்காங்க.அடி வாங்கியும் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல‌ "

"அடிச்ச அப்புறம் தான் தெரிஞ்சுது அந்த தியேட்டர் வாசல் ஆட்டோ ஸ்டாண்டு மொத்தமா அவன் பசங்க"

"அம்மா அப்பா இருக்கோமே.எங்களப் பத்தி அக்கறையே இல்லையா உனக்கு?"

"எங்க தலைவர் சொல்லிருக்காரு பெத்தவங்கள மதிக்கணும்.அதான் ஆட்டோ ஓட்டி உனக்கும் அப்பாவுக்கும் மாசாமாசம் 700 ரூவா குடுக்குறன்ல."

"அதுல நீயே 300 ரூபாய மன்றம்,படத்துக்குனு வாங்கிகுறியே"

"தலைவர விட உங்க ரெண்டு பேருக்கு 100 ரூவா அதிகம் செலவு பண்றன் .சந்தோஷப்படு."

"நீயும் உன் தலைவனும்.அவனா சோறு போடப்போறான்"

"யம்மா தலைவர பத்தி பேசாத.கெட்ட கோவம் வரும்."

வீட்டுக்குள் ஒலித்த குரல்கள், வீதியில் சென்ற வாத்தியார் காதில் விழுந்தது.

"அறியாமையும் சரியான படிப்பறிவும் இல்லாதது தான் இப்படி சினிமாப் பித்து பிடிச்சு திரிய‌  காரணம்".
தன் நண்பரிடம் கூறி வருந்தினார்.

"அவன் நடிக்கிறான் சம்பாதிக்கிறான்.இந்த கிறுக்குப் பயலுக மன்றம்,அது இதுனு இவங்களுக்குள்ள அடிச்சுக்குறாங்க.சே"
நண்பரின் வருத்தம்.

"இயக்குனர் சொல்றத அப்படியே ஒப்பிக்கிறாங்க.எந்த வசனமும் சினிமாவுக்காக எழுதப்படுறது தான்.அத நிஜமா நெனச்சு அவங்கள தூக்கி வெச்சு கொண்டாடுறாங்க"

"அறிவு விரிவடையும்போது இது சரியாயிடும்யா.விடுங்க."

"என்னமோ.என் கணக்குபடி அடுத்தது கம்ப்யூட்டர் யுகம் தான்.அப்போ இந்த சினிமா பைத்தியம் ஓரளவாச்சும் மாறிடும்."
நம்பிக்கையுடன் சொன்னார் வாத்தியார்.

20.4.2012…………….

"அப்படி என்னடா பாக்குற நாள் பூராவும்?"
கணினியுடன் ஒன்றிப்போயிருந்த தன் பெயரனைக் கேட்டார் வாத்தி.

"நீ 70yrs old man தாத்தா.உனக்கு இதெல்லாம் புரியாது."

"சொல்லுடா புரிஞ்சுக்குறேன்"

"facebook. சொன்ன உடனே புரிஞ்சுடுச்சா?"

"இத பத்தி பத்திரிக்கைல படிச்சிருக்கேன்.நல்ல முயற்சி.ஆனா நாள் முழுக்க இருக்குற அளவுக்கு என்ன இருக்கு இதுல?"

"புடிச்ச விஷயத்த share,like பண்ணுவோம்."

"உருப்படியா என்ன பண்ணுவீங்க?"

"recent happenings பத்தி discuss பண்ணுவோம்."

"எந்த மாதிரி?"

"இந்த மாதிரி" என்று அவன் வாய் சொல்லாமல் விழுங்கியதை விரல் சுட்டிக்காட்டியது.

கண்ணாடி சரிசெய்து கணினித்திரை நோக்கினார் வாத்தி.

"இந்த match தோத்ததுக்குக் காரணம் தோனியா சச்சினா?"
"எங்க xxxx அண்ணா படம் வசூல் 70 கோடி.
உங்க yyyy வசூல் 65கோடி தான்.போங்கடா (தணிக்கை செய்யப்பட்ட கெட்ட வார்த்தை)"
"அந்த படம் செம மொக்க.songs வெச்சு ஏமாத்துறாங்க"
 என்று பல உருப்படியான(!) விவாதங்கள்.

மேலும் அதில் groups என்பதன் கீழே இருந்த பெயர்களில் சில‌:
xxxx ஒழிப்பவர் ஒழிக்கும் சங்கம்.
yyyy ஒழிக்கும் சங்கம்.
xxxx வெறியர்கள்.

"எத்தன வருஷம் ஆகட்டும்.தொழில்நுட்பம் எவ்ளோ முன்னேறுனாலும்,எவ்ளோ படிச்சாலும் இவங்க திருந்த மாட்டாங்க.."
மனதில் எண்ணிக் கொண்டே,

"சாப்புட வாடா." பெயரனை அழைத்தார்.

"ஒரு பத்து நிமிஷம் தாத்தா.எங்க தலைவர் படத்த பத்தி ஒருத்தன் தப்பா பேசிட்டான்.அவன நல்ல கிழிச்சிட்டு வரேன்."

ஒரு திறமைசாலியை இரசிப்பது நன்று.
ஆனால் அவர் மேல் வெறிகொண்டு,மற்றவரை வெறுப்பதும் இழிப்பதும்  தவறு.

இரசனைக்கும் வெறிக்கும் உள்ள வேறுபாடை இளைஞர்கள் உணரும் வரை,
இந்தப் போதை தெளியாது.

...................................கந்தசுவாமி.........................

Tuesday, April 17, 2012

கதிர்வீச்சு அபாயம்


கதிர்வீச்சு அபாயம் குறித்து,

மடிகணினியில் குறிப்புகள் எடுத்து,

அலைபேசியை காதால் அரவணைத்து,

அணுஉலை ஆதரித்து வாக்களித்து,

குளிரூட்டிய அறையில் அமர்ந்து,

மின்னஞ்சல் அனுப்புகிறான் மனிதன்.

..........கந்தசுவாமி........

Wednesday, April 4, 2012

பிச்சை


       கன்னியாகுமரி விரைவு வண்டி சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தைலிருந்து புறப்பட்டது.
      
       தமிழ்நாட்டில் பெய்யும் கோடை மழை போல் அதிசயமாக,அந்தப் பெட்டியில் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
      
       அன்பிற்கினியன் என்று உண்மைப் பெயர் அழைப்போரை கோப‌த்தோடு பார்க்கும் 'அன்பு' இருந்த பகுதியில் அவனையும் சேர்த்து 6 பேர் இருந்தனர்.
      
       விரல்கள் தொட்டுத் தொட்டு மண் நிறம் மாறிய வெள்ளைத் தாள் புத்தகத்தை எத்தனையாவது முறையோ இரசித்துப் படித்துக் கொண்டிருந்த முதியவர்,
      
       விளையாடிக் கொண்டிருந்த தன் குழந்தையை பார்த்துக்கொண்டே,வரும் வைகாசியில் அதன் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து முதுகில் புத்தக மூட்டை கட்டிவிடும் யோசனையில் இருக்கும் தாய்,
      
       தலைகீழாய் பிடித்திருந்த புத்தகத்தில் தலையை மறைத்துக் கொண்டு ஒருவரை அறியாமல் மற்றவரைப் பார்த்து தங்களுக்குள் சிரித்துச் சிலிர்த்துக் கொண்டிருந்த இரு இளம் இதயங்கள்.
      
       பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில்,நல்ல சம்பளத்தில் வேலை செய்தாலும்,சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் அவனை சிக்கனம் என்று அவன் ஊர்காரர்கள் அழைக்க,'கஞ்சன்' என்ற பட்டப்பெயர் வைத்திருந்தனர் அவன் சக ஊழியர்கள்.
      
      சிக்கனமா கஞ்சத்தனமா என்றெல்லாம் பெரிதாய் கண்டுகொள்ளாத அவன்,தனக்கு பிடித்தவற்றை மட்டும் செய்யும் இக்காலத்தின் பெரும்பாலான இளைஞர்களின் எடுத்துக்காட்டு.
      
      கண்கள் மூடி காதொலிப்பான்களை மாட்டி,rockstar இரசிக்கத் தொடங்கினான்.
       
      ஆயிரம் வித்தியாசமான குணம்கொண்ட மனிதர்களை சுமந்து சென்ற அந்த இரயில்,சென்னையின் எல்லைகள் கடந்து அமைதியாய் இயங்கிக் கொண்டிருந்த சிற்றூர்களை,தன் ஒலிப்பானால் பயமுறுத்திவிட்டு பாய்ந்து சென்றது.
       
      "அண்ணே காசு கொடு" இரண்டு திருநங்கைகள்,யாசகம் கேட்டவாறு வந்தனர்.

சிலர் அவர்களின் தோரணைக்கு பயந்து கொடுக்க,சிலரோ அவர்கள் 'சாபம்' பலிக்கும் என்ற மூடநம்பிக்கையால் 'நமக்கேன் வம்பு' என்று கொடுத்தனர்.

2ரூபாய் கொடுத்தான் அவன்.

"5 ரூபா ஆவது குடுண்ணே"

"எடுக்கறது பிச்சை.இதுல என்னமோ குடுத்துவெச்ச மாதிரி 5ரூபா  கேக்கற?" அவன் அதட்ட,

"சும்மா குடுண்ணே" சளைக்காமல் கேட்டனர்.

"அதெல்லாம் முடியாது.உழைச்சு சாப்புடு.அப்பதான் காசோட அருமை தெரியும்.போ போ." விரட்டினான்.

"வேலை கொடுத்தா நாங்க ஏன் பிச்சை எடுக்க போறோம்" அவர்கள் கேட்க,

"உங்கள மாதிரி நெறைய பேர் இப்போ சாதிக்கிறாங்க.அவங்கள பார்த்து கத்துக்கோங்க.திறமை இருந்தா எல்லாரும் சாதிக்கலாம்"
அவன் சற்றே குரலை உயர்த்திச் சொல்ல,

முகத்தில் பயத்துடன் இருவரையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தன் பிள்ளையினை மடியில் ஏற்றி அதனை திசை திருப்ப முயன்றாள் தாய்.

"நீங்க எல்லாம் குடுத்து பழகுறது தான் சார் தப்பு"
அந்த முதியவரிடம் கூறினான்.

"உனக்கு குடுக்க மனசில்லனா குடுக்குற புண்ணியவான கெடுக்காத."
திட்டிவிட்டு நகர்ந்தனர் அந்த திருநங்கைகள்.

"எத்தனை பேர் இவங்களுக்கு வேலை குடுப்பாங்க?
 எத்தனை பேர் இவங்கள ஆதரிச்சு படிக்க உதவி பண்ணுவாங்க?
 கிண்டல் கேலியிலேயே இவங்க திறமை அமுங்கி போயிடுது"
அந்த முதியவர் அவனிடம் சொன்னார்.

"இவங்கள மாதிரி நெறைய பேர் இப்போ நல்ல நிலைல இருக்காங்க.மத்தவங்க இப்படி பிச்சை எடுத்து திரிய உங்கள மாதிரி ஆளுங்க குடுத்து பழக்கறது தான் காரணம்"காட்டமாய் கூறினான் அவன்.

"நீங்க சொல்ற அந்த ஆயிரத்துல ஒரு சாதனையாளர் எல்லாம் அவங்களுக்கு மனசளவுல ஆவது பக்கபலமா ரெண்டு பேர் இருந்ததால தான் எல்லா மனசு வலியையும் பொறுத்து முன்னேறுனாங்க.
இந்த மாதிரி பிச்சை எடுக்குறவங்க எல்லாம் அப்பா அம்மாவாலேயே துரத்திவிடப்பட்டவங்க."

"பிச்சை போடுறதுனால அவங்க மனக்குறைய தீர்க்கவா போறீங்க?"
நக்கலாகக் கேட்டான்.

"அவங்கள ஆதரிச்சு இயக்கம் நடத்துற அளவுக்கு எனக்கு பணமும் நேரமும் இல்ல.என் குடும்பத்தையும் நான் பாக்கணும்.ஆனா அவங்களோட ஒரு வேளை சாப்பாட்டுக்கு உதவ முடியும்.அதான் பண்ணேன்."

"ம்ம்ம்....." கொட்டி முடித்தான் அந்த வாக்குவாதத்தை.

"சே.தெரியாம இந்த பெருசு கிட்ட பேசிட்டன்.மொக்க போட்டு சாவடிச்சுடுச்சு."
தனக்குள் புலம்பியவாறே முறித்திருந்த பாடலைத் தொடர்ந்தான்.
       
        நல்ல வேளை முடித்தார்கள் என்று பிள்ளையை மறுபடி விளையாட இறக்கிவிட்டாள் அவள்.
      
       விழிகளில் பேசிக்கொண்டிருந்த அந்த இளசுகள் இவர்களின் வாய்ப்பேச்சைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.அவர்கள் வேறு உலகத்தில் இருந்தனர்.

       அடுத்த‌ பகுதியில் இருந்த ஒருவரின் மடிகணினியில் படம் ஓட,சந்தானத்தின் குரல் ஒலித்தது.
"ஒவ்வொருத்தருக்கு ஒரு feeling மச்சி"
...............................கந்தசுவாமி................................