Tuesday, October 2, 2012

அகிம்சை


"நம்ம ஒன்னும் காந்தி இல்ல நாட்டைத் திருத்த"

திரைப்பட வசனம் போல் தொணித்தாலும் உண்மையில் பலர் மனதிலும்,சிலர் உதடுகளிலும் வாழும் சொற்றொடர் இது.

காந்தியும் அகிம்சையும் பிரிக்க முடியாத தம்பதி.
இன்று தான் அகிம்சை என்னும் சொல் நாட்டில் அதிகம் ஒலிக்கிறது.

துருபிடித்துப்போன அதனை,வருடத்திற்குச் சிலமுறை மட்டும் தூசிதட்டும்  நாளிதழ்களும்,தலைவர்களின் சொற்பொழிவுகளும்,அறிக்கைகளும் நமக்குள் பல கேள்விகள் எழுப்புகிறது.

இன்றைய தேதியில்,
அகிம்சை என்றால் என்ன?
அது எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டுள்ளது?
அகிம்சைவாதி என்பவன் யார்?
சராசரி மனிதனின் மனதில் அது எப்படித் தெரிகிறது?

"ஒரு பிரச்சனை வந்தால் அதில் இருந்து ஒதுங்கிவிடுவோம்.
தேவையில்லாத வேலை நமக்கேன்.
எவனும் சரியில்ல.நமக்கு மட்டும் என்ன அக்கறை.
அகிம்சையா வாழறது தான் நம்ம வேலை."

இதுவே நம்மில் பலருக்கு அற‌வழி.
இதுவும் காந்தியின் அகிம்சையும் ஒன்றா?
ஆராய்ந்து பார்த்தால்,ஆயிரம் வேறுபாடுகள்.

காலத்திற்கு ஏற்றார்போல் மாறுகிறது என்றால்,உலகின் மிக அதிவேகமான பரிணாம வளர்ச்சி கண்டது,அகிம்சையாகத்தான் இருக்கமுடியும்.

நம் சுயநலத்திற்காக ஒரு கருத்தின் அடிப்படையினை முற்றிலும் மாற்றிப் புரிந்துகொள்கிறோம்.நம் வசதிக்கு அதனை வளைக்கிறோம்.
நான்,எனது என்ற எண்ணம் அகிம்சையினை "பயந்தாங்கொள்ளித்தனம்", "பச்சோந்தித்தனம்" ஆகியவையுடன் சமன் செய்கிறது.

இன்னும் சொல்லப்போனால் உண்மை அகிம்சை இன்று வன்முறையாக பார்க்கப்படுகிறது.வன்முறைகள் போராட்டமெனும் போர்வையில் ஒளிந்துகொள்கிறது.

மனிதனின் ஒரு சிறந்த கொள்கையும்,மனிதனைப் போலவே மரித்திடுமோயென்று வருந்துகிறேன்,அஞ்சுகிறேன்.

அகிம்சை மீண்டும் உயிர்பெற வேண்டுமென்றால்,முதலில் அதை நாம் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும்.

அகிம்சை என்பது,
ஒரு உணர்வு.வாழ்வின் ஒரு அங்கம்.
தனி மனிதனின் ஒழுக்கம்.
சமூகத்தின் அடையாளம்.

உரிமைக்காக போராடுவதும்,
மனஉறுதியுடன் வாழ்வதும்,
தன் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்வதிலும்,
பிறர் தவறுகளை அவர் மனம் புண்படாமல் சுட்டிக்காட்டுவதிலும்,
அவர் அதனைத் திருத்த வாய்ப்பளிப்பதும்,
தன் மனத்திற்கு உண்மையானவனாய் இருப்பதும்,
எல்லோருக்கும் நன்மையே நினைப்பதும்,
இவை அனைத்துமே அகிம்சை.

உணர்ந்திடுவோம்.உணர்த்திடுவோம்.அதன்வழி நடந்திடுவோம்.

......கந்தசுவாமி..........

No comments:

Post a Comment